நேற்று சுஷிலா கார்கி; இன்று குல்மன் கிசிங்: நேபாளத்தில் என்ன நடக்கிறது? | Nepal |

மின் பற்றாக்குறை பிரச்னையைத் தீர்த்து வைத்ததில் புகழ்பெற்றவர் குல்மன் கிசிங்.
காத்மாண்டுவில் தீக்கிரையாக்கப்பட்ட ஹில்டன் விடுதி சாலையில்...
காத்மாண்டுவில் தீக்கிரையாக்கப்பட்ட ஹில்டன் விடுதி சாலையில்...ANI
1 min read

நேபாளத்தில் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்க அந்நாட்டு இளைஞர்கள் குல்மன் கிசிங் பெயரை முன்மொழிந்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இவர் அந்நாட்டின் மின்வாரியத் தலைவராக இருந்துள்ளார். மின் பற்றாக்குறை பிரச்னையைத் தீர்த்து வைத்ததில் புகழ்பெற்றவர் குல்மன் கிசிங்.

நேபாளத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் இளைஞர்கள் போராட்டத்தால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். இதற்கானத் தடையை அந்நாட்டு அரசு நீக்கிய பிறகும், இளைஞர்களின் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்தார்கள்.

நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜினாமா செய்ய வேண்டும் என இளைஞர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தலைநகர் காத்மாண்டுவில் நாடாளுமன்றக் கட்டடம், உச்ச நீதிமன்றம், அதிபர் அலுவலகம், அதிபர் இல்லம், பிரதமர் இல்லம் உள்ளிட்டவற்றுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள்.

அதிபர் ராமசந்திர பௌடெலும் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேபாள அதிபர் ராஜினாமா செய்யவில்லை என ராணுவம் தரப்பில் பிறகு விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனிடையே, நேபாளத்தின் இடைக்காலத் தலைவராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை தகவல்கள் வெளியாகின.

இடைக்கால அரசுக்கு தலைமைப் பொறுப்பேற்பது யார் என்பது பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட நேபாள இளைஞர்களிடத்தில் விவாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவில் சுஷிலா கார்கி தேர்வு செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இடைக்கால அரசை வழிநடத்தும் பொறுப்பை குல்மன் கிசிங்கிடம் வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேர்மையானவர்களாகக் கருதப்படும் சிலர் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கி புதிய அரசு அமையவுள்ளதாகத் தெரிகிறது. இளைஞர்களாலேயே குல்மன் கிசிங் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. நேபாளத்தில் நேர்மையானவர்களாக அறியப்படுகிறார் குல்மன் கிசிங்.

நேபாளத்தின் இடைக்காலத் தலைவர் பொறுப்பேற்ற முதலில் பாலேந்திர ஷாவின் பெயர் அடிபட்டது. இவர் காத்மாண்டுவின் மேயராக இருந்தவர். இவர் வெளிப்படையாக இப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து சுஷிலா கார்கியின் பெயரை இளைஞர்கள் முன்மொழிந்தார்கள். இவரும் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கானப் போட்டியிலிருந்து விலகியதாகத் தெரிகிறது.

Nepal | Kulman Ghising | Nepal unrest | Nepal Interim Government | Sushila Karki | Interim Leader | Interim Government | Nepal GenZ | Nepal Youths | Nepal Youngsters |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in