குப்பைகளோடு கேரளத்திற்குச் செல்வேன்: அண்ணாமலை எச்சரிக்கை!

கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.
குப்பைகளோடு கேரளத்திற்குச் செல்வேன்: அண்ணாமலை எச்சரிக்கை!
1 min read

கேரள மாநிலத்தின் குப்பைகள் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுவதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், குப்பைகளோடு கேரளத்திற்குச் செல்லவிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.

திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூரில் உள்ள காலி இடத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் மூட்டை, மூட்டையாக கடந்த இரு நாட்களாக கொட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் அண்ணாமலை பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,

`காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள அரசின் குப்பைக் கிடங்காக மாற்ற அனுமதி அளித்திருக்கிறார்.

கேரள அரசுடன், திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தினம் தினம் லாரிகளில் கொண்டுவந்து கொட்டப்படும் இந்தக் கழிவுகளை தடுத்து நிறுத்தவேண்டிய சோதனைச் சாவடிகள், வசூல் மையங்களாக மாறிவிட்டன.

ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் திமுக அரசு, மறுபுறம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

அரசு அதிகாரிகளிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுக அரசுக்குத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன. உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இனியும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரியில் பொதுமக்களை திரட்டி, இந்த உயிரியல், மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in