ஸ்டாலின் பங்களிப்பில்லாமல் 40 தொகுதிகளிலும் வெற்றி சாத்தியமில்லை: செல்வப்பெருந்தகை

"திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல."
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://twitter.com/SPK_TNCC
2 min read

திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர, சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் செல்வப்பெருந்தகை மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது ஊடகங்களில் பேசுபொருளானது.

நாம் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோமா அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா என்று செல்வப்பெருந்தகை பொதுக்குழுவில் கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசுகையில், "தோழமை என்பது வேறு. தோழமையுடன் இருப்பதில் நமக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. ஆனால், எத்தனை காலம் சார்ந்து இருக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்" என்றார்.

இதற்கடுத்து பேசிய இளங்கோவன், "40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு திமுகவும், ஸ்டாலினும்தான் காரணம். நாம் தனித்து நின்றபோது கன்னியாகுமரி, சிவகங்கை தவிர்த்து, மற்ற இடங்களில் டெபாசிட்கூட பெற முடியவில்லை. முதலில் நம் எதிரியை வீழ்த்த வேண்டும். அதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும்.

ஆசை இருக்கலாம், அது பேராசையாக மாறி கடைசியில் ஒன்றும் இல்லாமல் போய்விடக் கூடாது" என்று பேசினார்.

இருவரது பேச்சும் செய்திகளில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, செல்வப்பெருந்தகை அறிக்கை விளக்கம் கொடுத்துள்ளார்.

"நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைக் கொண்டாடுகிற வகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், வெற்றிக்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், காங்கிரஸ் இயக்கத்தை எப்படி வலிமைப்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பதற்காக நேற்று 11.6.2024 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிற முதல் தீர்மானத்தில், ‘கடந்த மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற கூட்டணிக்குத் தலைமையேற்று கடுமையாக உழைத்து பரப்புரை மேற்கொண்ட தி.மு. கழக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் இப்பொதுக்குழுக் கூட்டம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம், தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறுவதற்கு தி.மு. கழக தலைவர் மு.க. ஸ்டாலினின் பங்களிப்பு தீர்மானத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நான் பேசும் போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதை அடைவதற்கு இலக்கும் இருக்கிறது. அதைப் போல, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த கருத்தியல் தான் காமராஜர் ஆட்சி என்று குறிப்பிட்டேன். இன்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி என்கிற நமது கனவு மெய்ப்பட வேண்டுமென்றால் இன்றிலிருந்து அதற்கான உழைப்பை செலுத்தி நமது இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இங்கு உரையாற்றுபவர்கள் கருத்துகளைக் கூற வேண்டுமென்று கூறினேன். ஆனால், எனக்குப் பின்னால் உரையாற்றியவர்கள் கூறிய சில கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு நாளேடுகளில் செய்திகளாக வெளிவந்துள்ளன. பொதுக்குழுவின் நோக்கம் என்பது காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்துவது தான். அதேநேரத்தில், காங்கிரஸ் பங்கேற்றிருக்கிற கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற மு.க. ஸ்டாலினின் கடுமையான உழைப்பையும், வெற்றிக்கான அவரது பங்களிப்பையும் எப்பொழுதுமே மதிக்கத் தவறியதில்லை. அவரது பங்களிப்பில்லாமல் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது.

சட்டப்பேரவையில் எனது உரைகள் அனைத்துமே தி.மு.க. தலைமையிலான ஆட்சிக்கு உற்ற துணையாகவும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கிற வகையிலும் அமைந்துள்ளதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்துவது இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்துவதாகும். இந்நிலையில், வெளிப்படைத்தன்மையோடு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கருத்துகளை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.

ராகுல் காந்திக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் இடையே இருக்கிற கொள்கை சார்ந்த இணக்கத்தின் காரணமாகவே இந்தியா கூட்டணி தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்த இணக்கம் என்பது உண்மையான உணர்வின் அடிப்படையிலானது. இந்தியாவிலேயே தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாமல் இருப்பதற்குக் காரணம், இரு தலைவர்களிடையே இருக்கிற கொள்கை சார்ந்த இணக்கமான உறவு தான். அதனால் தான் தமிழகத்தில் மகத்தான வெற்றியை இந்தியா கூட்டணியால் பெற முடிந்தது.

எனவே, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர, சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. கடந்த 2003 இல் தொடங்கிய இக்கூட்டணி ஒரு தேர்தலை தவிர, அனைத்துத் தேர்தல்களிலும் கூட்டணியாகவே தேர்தல் களத்தை சந்தித்திருக்கிறோம். எஃகு கோட்டை போல் இருக்கும் இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in