
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் அவசியம் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.
1967-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்ததும், மதராஸ் ஸ்டேட் என்ற பெயரை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய சட்டப்பேரவையில் 1967 ஜூலை 18-ல் அன்றைய முதல்வர் சி.என். அண்ணாதுரை தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானம் அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேறியது.
இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில், “அண்ணா பிறந்த இந்த மண்ணில்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் தங்களின் பேச்சாலும், எழுத்தாலும் இந்த சமூதாயத்தை மாற்றிக் காட்டியவர்கள். கடைகளில் தமிழில் அவசியம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து உத்தரவிட்டுள்ளன. இதனை அவசியம் வணிகர்கள் பின்பற்ற வேண்டும்” எனத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.