தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் பேசுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வெறுப்புப் பேச்சு குறித்து மே 1-ல் தேர்தல் ஆணையத்தில் தான் புகாரளித்துள்ளதாகவும், இதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் எதிர்மனுதாரராக பிரதமரைச் சேர்த்திருப்பதால், வழக்கைப் பட்டியலிட மறுப்பதாக காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் புகாரளித்தார்கள். இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவில் குறைபாடுகள் ஏதும் இருக்கும்பட்சத்தில் அதை நிவர்த்தி செய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்தால், அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.