
நில முறைகேடு வழக்கில் தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் மே 23-ல் ஆஜராக வேண்டும்; இல்லாவிட்டால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ பகுதியில் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பு மனையிடத்தை, சென்னை மேயராக இருந்தபோது அமைச்சர் மா.சுப்பிரமணியன் போலி ஆவணங்கள் தயாரித்து தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, பார்த்திபன் என்பவர் அளித்த புகாரின்பேரில் கடந்த அதிமுக ஆட்சியின்போது மா. சுப்பிரமணியன் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணையை சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த மா. சுப்பிரமணியன், கடந்த 1998-ல் வாங்கப்பட்ட அந்த இடத்தின் மூலம் சிட்கோவுக்கோ அல்லது அரசுக்கோ எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும், 20 ஆண்டுகள் கழித்து தனக்கு எதிரான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நில முறைகேடு வழக்கு விசாரணை இன்று (மே 6) மீண்டும் நடைபெற்றது.
அப்போது, `வழக்கு தொடர்பாக மே 23 அன்று நடக்கும் விசாரணையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டிப்பாக ஆஜராகவேண்டும்; இல்லையென்றால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்’ என்று வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.