

ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார்.
சிவகாசி சட்டமன்ற தொகுதி சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று (நவ.14) நடந்தது. அதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். தற்போதைய காங்கிரஸ் கட்சி, காந்தி, நேரு, நேதாஜி ஆகியோர் தொடங்கிய காங்கிரஸ் கட்சி இல்லை, இன்றைக்கு இருப்பது நாட்டை காட்டிக்கொடுக்கும் கட்சி. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சி. நாட்டில் என்ன நடந்தாலும் ராகுல் காந்தி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். வீணான காங்கிரஸ் கட்சியை திமுக தான் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. கட்சியைக் கலைத்துவிடுங்கள். தமிழ்நாட்டிற்கு அதிமுகவும் திமுகவும் போதும் என்று பேசினார்.
இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:-
“அதிமுகவில் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர், குறைந்தபட்ச அரசியல் நாகரிகம் கூட இல்லாமல் பேசுகிறார். இந்த அதிமுக எத்தகைய கட்சி? அந்தக் கட்சியில் நாகரிகமற்றவர்கள் எல்லாம் யாரைப் பற்றிப் பேசுகிறார்கள்? எந்தக் கட்சியைப் பற்றிப் பேசுகிறார்கள்? எந்தக் கட்சியின் தலைவரைப் பற்றிப் பேசுகிறார்கள்? வரம்பு இல்லாமல், ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் இப்படிப் பேசுகிறார்கள் என்றால், அங்கே அமைதியாக அமர்ந்திருக்கும் அக்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்து கொண்டிருக்கிறார். அவர் கண்டித்திருக்க வேண்டாமா? தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா?
அதிமுகவுக்கு என்ன வரலாறு இருக்கிறது? 53 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கட்சி, அதில் எத்தனை தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 140 ஆண்டுகள் ஆகின்றன. இன்று இந்தியாவில் பதவிக்காக செயல்படாத ஒரே பேரியக்கமாக, மக்களுக்கான இயக்கமாக காங்கிரஸ் இருக்கிறது.
யாரை டாடி என்று கூப்பிடுவது என்றுகூட அவருக்குத் தெரியவில்லை. அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவருக்கு நாவடக்கம் வேண்டும். நாங்கள் நாகரிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பேச ஆரம்பித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். பிஹாரில் காங்கிரஸ் முதன்மைக் கட்சி கிடையாது. நாங்கள் முதன்மைக் கட்சி என்று காங்கிரஸ் எப்போதும் தம்பட்டம் அடிப்பது கிடையாது. ஆனால் அதிமுக முதன்மைக் கட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட 1996 தேர்தலில் என்ன நடந்தது? படுதோல்வியை நீங்கள் சந்திக்கவில்லையா? அப்போது ஜெயலலிதாவால் வெற்றி பெற முடிந்ததா?
நாகரிகம் அறியாமல் உலக வரலாறு தெரியாமல் இந்திய வரலாறு தெரியாமல் முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசுகிறார் என்றால் அவரை எடப்பாடி பழனிசாமி கண்டித்திருக்க வேண்டாமா? இதுதான் அவர்களது நாகரிகமற்ற அரசியல்” என்றார்.
Tamil Nadu Congress Committee President Selvaperunthagai has condemned Rajendra Balaji, stating that he needs to learn to control his tongue.