
உயிர்ம வேளாண்மையில் (Organic Farming) சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 2) வழங்கினார்.
இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் பெருமளவில் கொண்டு சேர்த்தவரும், உயிர்ம வேளாண்மையில் பெரும் பங்களிப்பை ஆற்றியவருமான நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என்று 2023-2024-ம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும், ஊக்குவிக்கும் மற்றும் பிற உயிர்ம விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு, தமிழக அரசால் இந்த `நம்மாழ்வார் விருது’ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 2024-ம் ஆண்டில் மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 2025-ம் ஆண்டுக்கான நம்மாழ்வார் விருதை சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 2) வழங்கினார்.
உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த க. சம்பத்குமாருக்கு முதல் பரிசாக ரூ. 2.50 லட்சம் மற்றும் ரூ. 10,000 மதிப்பிலான பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த த. ஜெகதீஸுக்கு இரண்டாம் பரிசாக ரூ. 1.50 லட்சம் மற்றும் ரூ. 7,000 மதிப்பிலான பதக்கமும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வே. காளிதாஸுக்கு மூன்றாம் பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் ரூ.5,000 மதிப்பிலான பதக்கமும் வழங்கப்பட்டது.