
அதிமுக கவுன்சிலர்கள் தாக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2002-ல் சென்னை மாமன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களைத் தாக்கியதாகவும் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததாகவும் அமைச்சராக இருக்கக்கூடிய மா. சுப்பிரமணியன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்புடைய வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பை வாசித்தது.
வழக்கில் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை, அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறிவிட்டார்கள், இதர சாட்சிகள் காவல் துறையினரால் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி மா. சுப்பிரமணியன் உள்பட 6 பேர் ஒரு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். மற்றொரு வழக்கில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2002-ல் சென்னை மாமன்றக் கூட்டம் நடைபெற்றபோது, பொறுப்பு மேயராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். இவருடையத் தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றபோது, அதிமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாகப் புகார். மேலும், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாகப் புகார். இவ்விரண்டு வழக்குகளிலிருந்தும் தான் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.