
தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் தாம் இல்லை என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் தில்லியில் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இதற்காக தமிழக பாஜக தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கோவையில் இன்று (ஏப்ரல் 4) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அண்ணாமலை கூறியதாவது,
புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா?
புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. இன்றைக்கு நாளைக்கு என்று நீங்கள் செய்திகளை வெளியிட்டு, அண்ணாமலை தில்லிக்குச் சென்றார், அண்ணாமலை இவரைக் கைகாட்டினார், அண்ணாமலை இவரை கைகாட்டவில்லை என எந்த ஒரு வம்புச் சண்டைக்கும் நான் வரவில்லை. நான் போட்டியில் இல்லை.
அதிமுக, பாஜக கூட்டணி ஏற்படவேண்டுமென்றால் மாநிலத் தலைவரை மாற்றவேண்டும் என்பது குறித்து..
அது குறித்து நான் எந்த ஒரு கருத்தும் சொல்ல விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்த கட்சி நன்றாக இருக்கவேண்டும். இது நல்லவர்கள் இருக்கக்கூடிய கட்சி. நல்ல ஆத்மாக்கள் இருக்கக்கூடிய கட்சி. உயிரைக்கொடுத்து பலர் இந்த கட்சியை வளர்த்திருக்கிறார்கள். புண்ணியம் செய்தவர்கள் இருக்கக்கூடிய கட்சி. எனவே இந்த கட்சி எப்போதும் நன்றாக இருக்கவேண்டும். புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்போது நிறைய பேசலாம்.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்…
நீட் தேர்வு தொடர்பான நாடகம் இன்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது. கதை முடிந்துவிட்டது. ஏனென்றால் இன்று அதை குடியரசுத் தலைவர் நிராகரித்துத் திருப்பி அனுப்பிவிட்டார். நீங்கள் கூறியுள்ள காரணங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நீட் தேர்வு இந்திய மக்களுக்கும் தமிழக குழந்தைகளுக்கும் நல்லது என்றும் கூறி திமுக நிறைவேற்றிய சட்டத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். முதல்வரின் நீட் நாடகம் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டது.