இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தனிப்பட்ட ஒருவரை நாங்கள் முன்னிறுத்தவில்லை என விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், தேசியத் தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் சிதம்பரத்தில் போட்டியிடும் திருமாவளவன் க்யூஆர் கோட் (QR Code) மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால், திருமாவளவனின் பிரசாரத்தை விடியோ மூலம் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசினார்.
"நான் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் அமைதியாக நடைபெற்று வருகிறது. எங்களுடைய திமுக தலைமையிலான கூட்டணிக்கு, குறிப்பாக இண்டியா கூட்டணிக்குப் பெரும்பாலான மக்கள் நல்ல வரவேற்பைத் தருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கைதான் எங்களுடைய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லலாம். தனிப்பட்ட ஒருவரைப் பிரதமர் வேட்பாளர் என்று நாங்கள் யாரையும் முன்னிறுத்தவில்லை. எங்களுடைய கொள்கைகளையும், தேர்தல் அறிக்கையையும்தான் நாங்கள் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறோம்" என்றார் திருமாவளவன்.