

இண்டியா கூட்டணிக்கு நீதிபதி ஒருவரின் தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் பதவி நீக்கத் தீர்மானத்தைக் காட்டி நீதித்துறையை மிரட்டுவார்களா என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுதல் தொடர்பான வழக்கில், சிஐஎஸ்எஃப் படையினர் பாதுகாப்புடன் மனுதாரர் தீபமேற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த டிசம்பர் 3 அன்று உத்தரவிட்டார். இதற்கடுத்த நிகழ்வுகள் பெரும் சர்ச்சையான நிலையில், இன்றுவரை அவரது உத்தரவைச் செயல்படுத்தாத தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கிடையில் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் பதவி நீக்கத் தீர்மானத்தை அளித்தார்கள்.
இந்நிலையில், திமுக மற்றும் இண்டியா கூட்டணியினர் பதவி நீக்கத் தீர்மானம் கொடுத்ததற்குக் கண்டனம் தெரிவித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
“இந்துக்களுக்கு எதிரான போக்கை இண்டியா கூட்டணியினர் பெருமையாகக் காட்டி வருகிறார்கள். அரசியலமைப்பின் உரிமைகளைப் பற்றி தொடர்ந்து பேசி வரும் இவர்கள்தான் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த நீதிபதிக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதும் சிறுபான்மையினர் வாக்குகளை வாங்கும் அரசியலுக்காக மட்டுமே. இந்த அரசியல் நாடகத்தின் மூலம் வாக்கு வங்கி அரசியலுக்கு முன் நீதியின் அதிகாரம் இரண்டாம்பட்சம் தான் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். தங்களுக்கு ஏதேனும் ஒரு நீதிபதியின் தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, அவரை மிரட்டி அடிபணிய வைக்க முடியும் என்றும் இதன்மூலம் இண்டியா கூட்டணி காட்டியிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு இதைவிட அச்சுறுத்தல் வேறு என்னவாக இருக்க முடியும்? பிரித்தாளும் அரசியல்தான் முக்கியம் என்பதை நாட்டுக்கு திமுகவும் இண்டியா கூட்டணியும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது” என்றார்.
If the I.N.D.I. Alliance doesn’t like any Judge’s verdict, they will use the impeachment process as a tool to threaten the judiciary into submission? What can be a greater threat to the Constitution than this? said BJP Former Leader Annamalai