குணால் காம்ராவின் கோரிக்கை நிராகரிப்பு: மேலும் ஒரு வழக்குப்பதிவு!

குணால் காம்ரா மீது பதிவு செய்யப்படும் மூன்றாவது வழக்கு இது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

குணால் காம்ரா விசாரணைக்கு ஆஜராக ஒரு வார காலம் அவகாசம் கோரிய நிலையில், மும்பை காவல் துறை இதை நிராகரித்துள்ளது.

மஹாராஷ்டிரத்தில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியின்போது முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, இந்த ஆட்சியில் துணை முதல்வராக உள்ளார்.

அரசியல் நையாண்டிகளுக்குப் பேர் போன ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் காம்ரா, அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று பகடியாகப் பேசி கிண்டல் செய்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது.

அதை முன்வைத்து சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் குணால் காம்ராவை கடுமையாக விமர்சித்தார்கள். மேலும், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு) தொண்டர்கள், மும்பையில் குணால் காம்ராவின் நகைச்சுவை அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற விடுதியைச் சூறையாடினர்கள். இதுதொடர்பாக, குணால் காம்ரா மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு குணால் காம்ராவுக்கு மும்பை காவல் துறை அழைப்பாணை அனுப்பியது. குணால் காம்ரா சார்பாக கார் காவல் நிலையத்துக்கு நேரில் சென்ற அவருடைய வழக்கறிஞர், குணால் காம்ரா நேரில் ஆஜராக 7 நாள்கள் அவகாசம் கோரினார்.

மும்பை காவல் துறையினர் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளனர். மேலும், குணால் காம்ராவுக்கு இரண்டாவது அழைப்பாணையை அனுப்ப காவல் துறை திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, சிவசேனா தலைவர் மயூர் போர்ஸ் மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலுள்ள மன்மாட் காவல் நிலையத்தில் குணால் காம்ராவுக்கு எதிராகப் புகாரளித்தார். இதன் அடிப்படையில் அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குணால் காம்ரா மீது பதிவு செய்யப்படும் மூன்றாவது வழக்கு இது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in