கோவையில் பிரதமர் மோடி வாகனப் பேரணி: முழு விவரம்!
கோவையில் நாளை பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நடைபெறுகிறது.
சமீபத்தில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். ஏற்கெனவே இந்த வருடம் ஐந்து முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, நாளை கோவை வருகிறார்.
கோவையில் பிரம்மாண்ட வாகன அணிவகுப்புப் பேரணியில் பிரதமர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் மோடியின் வாகனப் பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதன் பிறகு பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரி பாஜகவினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.
இதைத் தொடர்ந்து அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நாளை மாலை 5.45 மணியளவில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் சிக்னல் பகுதியிலிருந்து பிரதமர் மோடி வாகனப் பேரணியைத் தொடங்குகிறார். சாய்பாபா காலனியில் தொடங்கும் வாகனப் பேரணி மாலை 6.45 மணிக்கு ஆர்.எஸ். புரம் தபால் நிலையம் அருகே நிறைவு பெறுகிறது.
இதற்காக கோவை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 5000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கண்ணப்பன் நகர் பிரிவு சாலையிலிருந்து ஆர்.எஸ். புரம் வரை சுமார் 4 கி.மீ தூரத்திற்கு இந்த வாகனப் பேரணியானது நடைபெற திட்டமிடப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பேரணி 2 கி.மீ. தூரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.