குணால் கம்ரா மன்னிப்புக் கேட்கவேண்டும்: முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் எச்சரிக்கை!

யாரெல்லாம் துரோகிகள் என்று 2024 சட்டப்பேரவைத் தேர்தலின் மூலம் மக்கள் காண்பித்துள்ளார்கள் என்பதை குணால் கம்ரா நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்
குணால் கம்ரா மன்னிப்புக் கேட்கவேண்டும்: முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் எச்சரிக்கை!
ANI
1 min read

மஹாராஷ்டிரத்தின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை, தனது நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா கிண்டல் செய்தது சர்ச்சையான நிலையில், அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ்.

மஹாராஷ்டிரத்தில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியின்போது முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, இந்த ஆட்சியில் துணை முதல்வராக உள்ளார்.

இந்நிலையில், அரசியல் நையாண்டிகளுக்குப் பேர் போன ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் கம்ரா, அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று பகடியாகப் பேசி கிண்டல் செய்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது.

அதை முன்வைத்து சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கம்ராவை கடுமையாக விமர்சித்தார்கள். மேலும், இந்த விவகாரத்தால் ஆத்திரமடைந்த அக்கட்சித் தொண்டர்கள் குணால் கம்ராவின் அந்த நிகழ்ச்சி நடைபெற்ற மும்பையில் உள்ள ஹோட்டலை சூறையாடினர்கள்.

இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஷிண்டேவை அவதூறு பேசியதாகக் குறிப்பிட்டு குணால் கம்ரா மீது வழக்கு பதியப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் பட்னாவீஸ்,

`யாரெல்லாம் துரோகிகள் என்றும், யாரெல்லாம் துரோகிகள் இல்லை என்றும் 2024 சட்டப்பேரவைத் தேர்தலின் மூலம் மக்கள் காண்பித்துள்ளார்கள் என்பதை குணால் கம்ரா நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். பேச்சுரிமை என்ற பெயரில், பிறரின் சுதந்திரம் மற்றும் சித்தாந்தங்களில் ஒருவர் தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் கம்ரா மன்னிப்புக் கேட்கவேண்டும்’ என்றார்.

அதேநேரம் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சஞ்சய் ராவத், பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் குணால் கம்ராவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in