
நம்முடைய 14 வயதில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்?
வைபவ் சூர்யனவன்ஷி, இந்த 14 வயதில் ஐபிஎல் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் என்கிற புதிய வரலாறைப் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2019-ல் 16 வயதில் பிரயாஸ் ரே என்கிற பெங்கால் வீரர் ஆர்சிபி அணிக்காக விளையாடியிருந்ததே சாதனையாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எக்ஸ்ட்ரா கவர் பக்கம் சிக்ஸர் அடித்ததை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. ஷேவாக், ஜெயிஸ்வால், அபிஷேக் சர்மா போல அதிரடியான பேட்டிங் தான் அணுகுமுறை என்பதைத் தனது முதல் ஆட்டத்திலேயே வெளிப்படுத்தியுள்ளார். முதலில் ஷர்துல் தாக்குரின் பந்தில் சிக்ஸர் அடித்த சூர்யவன்ஷி, பிறகு எதிர்கொண்ட 3-வது பந்தில் ஆவேஷ் கானின் பந்திலும் சிக்ஸர் அடித்து ஆச்சர்யப்படுத்தினார். 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெயிஸ்வாலுடன் இணைந்து 8.4 ஓவர்களில் 85 ரன்கள் கூட்டணி அமைத்தார். தனது முதல் ஐபிஎல் அனுபவத்தை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளார்.
சரி, இந்த 14 வயதில் சூர்யவன்ஷியால் எப்படி இவ்வளவு தூர முன்னேற முடிந்தது? இந்தக் கேள்வி எல்லோருக்கும் இருக்கும். சூர்யவன்ஷியின் உழைப்பும் அவருடைய தந்தையின் தியாகங்களும் தான் இன்றைய புகழுக்கெல்லாம் முக்கியக் காரணங்கள்.
இந்தியா உலகக் கோப்பையை வென்ற 2011-ல் பிறந்தவர் சூர்யவன்ஷி. பீஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 100 கி.மீ தள்ளியுள்ள சமஸ்திபூரைச் சேர்ந்த சூர்யவன்ஷி, 8 வயதிலேயே 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடியதால் மகன் மீது நம்பிக்கை வைத்து கிரிக்கெட் பயிற்சிகளுக்குத் தொடர்ந்து அனுப்பினார் அவருடைய தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி. இதற்காக தன்னுடைய கிராமத்திலிருந்த பண்ணை நிலத்தை விற்று அதைக் கொண்டு மகனின் கிரிக்கெட் செலவுகளை ஈடுகட்டினார். சூர்யவன்ஷியின் பயிற்சியாளர் அவருடைய தந்தை தான். தன்னால் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாததால் தன் மகனை அதே விளையாட்டில் தற்போது சாதிக்க வைத்துள்ளார்.
வினூ மன்கட் கோப்பைப் போட்டியில் கிட்டத்தட்ட 400 ரன்கள் எடுத்த சூர்யவன்ஷி 19 வயதுக்குட்பட்டோருக்கான பீஹார் அணியில் இடம்பெற்று சேலஞ்சர் கோப்பையில் விளையாடினார். அப்படியே இந்திய இளையோர் அணியிலும் இடம்பிடித்தார். எனினும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்கவில்லை.
கடந்த வருடம் 12 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி சாதனை படைத்தார் சூர்யவன்ஷி. 1986-க்குப் பிறகு முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்தார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி சூர்யவன்ஷியை ரூ. 1.1 கோடிக்குத் தேர்வு செய்தபோது ஆச்சர்யப்படாத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை. ஐபிஎல் ஏலத்தில் தேர்வான இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்று அதிக வெளிச்சத்தை அப்போதே அடைந்தார். அடிப்படை விலையாக ரூ. 30 லட்சத்தில் தொடங்கிய ஏலத்தில் தில்லியும் ராஜஸ்தானும் போட்டியிட்டன. சரி, ராஜஸ்தான் அணிக்கு சூர்யவன்ஷியின் திறமை எப்படி அவ்வளவு பெரிய நம்பிக்கை வந்தது? அதற்கு முன்பு ராஜஸ்தான் அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட சூர்யவன்ஷிக்கு ஒரு ஓவரில் 17 ரன்கள் எடுக்கவேண்டிய இலக்கு அளித்தார் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர். அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்ததைப் பார்த்து வியந்த விக்ரம் ராத்தோர் உடனே சூர்யவன்ஷிக்கு டிக் அடித்தார். அன்று திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் தான் இவ்வளவு தூரம் சூர்யவன்ஷியை அழைத்து வந்துள்ளது.
ஐபிஎல் பணம் சூர்யவன்ஷியைப் பாதிக்குமா என்கிற கவலையும் சிலருக்கு உண்டு. காரணம் இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியில் விளையாடிய இளம் வீரரான பெங்காலின் பிரயாஸ் ரே-வை ரூ. 1.5 கோடிக்கு ஆர்சிபி தேர்வு செய்தாலும் அவர் ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் மட்டும் விளையாடி அப்படியே காணாமல் போய்விட்டார். உள்ளூர் கிரிக்கெட்டில் கூட அவரைக் காண முடியவில்லை. எனினும் 14 வயதில் கோடீஸ்வரன் ஆனாலும் அந்த அந்தஸ்து தன் மகனைப் பாதிக்காது என்கிறார் சூர்யவன்ஷியின் தந்தை. என் மகனுக்கு கிரிக்கெட் விளையாடுவதில் தான் ஆர்வம். மற்றதெல்லாம் அவனுக்குத் தெரியாது என்கிறார் நம்பிக்கையுடன்.
பார்க்க பெரிய பையன் போலத் தெரிந்ததால் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சைகளும் ஆரம்பத்தில் எழுந்தன. ஆனால் வயது குறித்த பிசிசிஐயின் எல்லாச் சோதனைகளிலும் தேர்ச்சியடைந்துள்ளார் சூர்யவன்ஷி.
கடந்த செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இளையோர் டெஸ்டில் 58 பந்துகளில் சதமடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார் சூர்யவன்ஷி. இளையோர் கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீரர் என்கிற சாதனையையும் படைத்தார். ஐபிஎல் 2025-ன் முதல் பாதியில் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில் லக்னெளவுக்கு எதிரான ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராகக் களமிறக்கப்பட்டார்.
லாராவை ஆதர்சமாகக் கொண்ட சூர்யவன்ஷி, முதல் ஐபிஎல் ஆட்டத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்த பிறகு கண்ணீருடன் வெளியேறினார். கிரிக்கெட்டையும் தனது விக்கெட்டையும் அவர் எவ்வளவு மதிக்கிறார் என்பதற்கான உதாரணம் அது.