
ஐபிஎல் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
பிஹாரைச் சேர்ந்த 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ. 1.1 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார். நாக்பூரில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் உயர்திறன் மையத்தில் இவருடையச் செயல்பாடு திருப்தியளிக்கும் வகையில் இருந்ததையடுத்து, அணி நிர்வாகம் இந்த நம்பிக்கையை வைத்தது. ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டபோது வைபவ் சூர்யவன்ஷிக்கு வயது 13.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்குக் காயம் ஏற்பட்டதையடுத்து, லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்கவில்லை. மாற்று வீரராக இளம் இடக்கை பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினார்.
இதன்மூலம், ஐபிஎல் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் அறிமுகமான இளம் வீரர்கள்
வைபவ் சூர்யவன்ஷி (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 14 வயது 23 நாள்கள் (எதிரணி: லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் - இன்று)
பிரயாஸ் ரே பர்மன் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 16 வயது 157 நாள்கள் (எதிரணி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 2019)
முஜீப் உர் ரஹ்மான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) - 17 வயது 11 நாள்கள் (எதிரணி: தில்லி டேர்டெவில்ஸ் - 2018)
ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 17 வயது 152 நாள்கள் (எதிரணி: சென்னை சூப்பர் கிங்ஸ் - 2019)
பிரதீப் சங்க்வான் (தில்லி டேர்டெவில்ஸ்) - 17 வயது 179 நாள்கள் (எதிரணி: சென்னை சூப்பர் கிங்ஸ் - 2008)
சர்ஃபராஸ் கான் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) - 17 வயது 182 நாள்கள் (எதிரணி: சென்னை சூப்பர் கிங்ஸ் - 2015)
இளங்கன்று பயமறியாது என்பார்கள். இதற்கேற்ப, 14 வயதில் ஐபிஎல் போன்ற உலகத்தரம் மிக்க ஒரு போட்டியில் களமிறங்குகிறோம் என்கிற எந்தவொரு பதற்றமும் இல்லாமல் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி தன் வருகையை அதிரடியாக அறிவித்திருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.
20 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 34 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸுக்கு அற்புதமான தொடக்கத்தைத் தந்தார். ஜெயிஸ்வாலுடன் இணைந்து நன்றாக விளையாடியதால் ராஜஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தது.
வைபவ் சூர்யவன்ஷி கண்களில் பயமில்லை. பல அற்புதங்களை நிகழ்த்தப்போகிறார் என்பது மட்டும் நிச்சயம்.