பாலியல் வழக்கு: நேபாள வீரர் லமிச்சானே விடுதலை

வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான நேபாள அணியில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லமிச்சானே
லமிச்சானே

பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரரான சந்தீப் லமிச்சானேவுக்கு நேபாள நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நிலையில் அவர் விடுதலை ஆகியுள்ளார்.

கடந்த 2022-ல் காத்மண்டுவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 18 வயதுப் பெண்ணை லமிச்சானே பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அச்சமயத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் சிபிஎல் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த லமிச்சானே உடனடியாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு இடைக்காலத் தடை விதித்தது நேபாள கிரிக்கெட் வாரியம். இச்சம்பவம் குறித்து மறுப்புத் தெரிவித்திருந்தார் லமிச்சானே. பிறகு நேபாள அணிக்காக சில போட்டிகளில் விளையாடவும் செய்தார்.

இந்நிலையில் லமிச்சானே மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த டிச.29 அன்று விசாரணைக்கு வந்தது. லமிச்சானேவைக் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், அவருக்கு தண்டனையை அறிவித்தது. அதன்படி, லமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக லமிச்சானேவின் வழக்கறிஞர் சரோஜ் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில், சந்தீப் லமிச்சானேவை அந்நாட்டு உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனால் அவர் இனி வழக்கம்போல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார். இந்நிலையில் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான நேபாள அணியில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே உலகக் கோப்பைக்கான நேபாள அணி அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்துக் கொள்ளலாம் என ஐசிசி அறிவித்திருந்த நிலையில் மீண்டும் அவர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in