வைபவ் சூர்யவன்ஷி: 14 வயது சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை!

"என்னுடையப் பயிற்சிக்காக அம்மா இரவு 11 மணிக்கு உறங்கி அதிகாலை 2 மணிக்கு எழுந்துவிடுவார். அப்பா எனக்காக வேலையைவிட்டார்."
வைபவ் சூர்யவன்ஷி: 14 வயது சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை!
ANI
2 min read

ஐபிஎல் போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. இதில் 11 சிக்ஸர்கள் அடக்கம்.

பிஹாரைச் சேர்ந்த 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ. 1.1 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் போட்டியில் தனது முதல் ஆட்டத்தின் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி வருகையை அறிவித்தார். மூன்றாவது ஆட்டத்தில் 35 பந்துகளில் சதமடித்து உலக கிரிக்கெட்டை அதிரச் செய்துள்ளார்.

யார் இவர்?

இந்தியா உலகக் கோப்பையை வென்ற 2011-ல் பிறந்தவர் சூர்யவன்ஷி. பிஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 100 கி.மீ தள்ளியுள்ள சமஸ்திபூரைச் சேர்ந்த சூர்யவன்ஷி, 8 வயதிலேயே 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடியதால் மகன் மீது நம்பிக்கை வைத்து கிரிக்கெட் பயிற்சிகளுக்குத் தொடர்ந்து அனுப்பினார் அவருடைய தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி. இதற்காக தன்னுடைய கிராமத்திலிருந்த பண்ணை நிலத்தை விற்று அதைக் கொண்டு மகனின் கிரிக்கெட் செலவுகளை ஈடுகட்டினார். சூர்யவன்ஷியின் பயிற்சியாளர் அவருடைய தந்தை தான். தன்னால் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாததால் தன் மகனை அதே விளையாட்டில் தற்போது சாதிக்க வைத்துள்ளார்.

வினூ மன்கட் கோப்பைப் போட்டியில் கிட்டத்தட்ட 400 ரன்கள் எடுத்த சூர்யவன்ஷி 19 வயதுக்குட்பட்டோருக்கான பிஹார் அணியில் இடம்பெற்று சேலஞ்சர் கோப்பையில் விளையாடினார். அப்படியே இந்திய இளையோர் அணியிலும் இடம்பிடித்தார். எனினும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷிக்கு இடம் கிடைக்கவில்லை.

கடந்த வருடம் 12 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி சாதனை படைத்தார் சூர்யவன்ஷி. 1986-க்குப் பிறகு முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்தார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி சூர்யவன்ஷியை ரூ. 1.1 கோடிக்குத் தேர்வு செய்தபோது ஆச்சர்யப்படாத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை. ஐபிஎல் ஏலத்தில் தேர்வான இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்று அதிக வெளிச்சத்தை அப்போதே அடைந்தார். அடிப்படை விலையாக ரூ. 30 லட்சத்தில் தொடங்கிய ஏலத்தில் தில்லியும் ராஜஸ்தானும் போட்டியிட்டன. சரி, ராஜஸ்தான் அணிக்கு சூர்யவன்ஷியின் திறமை மீது எப்படி அவ்வளவு பெரிய நம்பிக்கை வந்தது?

அதற்கு முன்பு ராஜஸ்தான் அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட சூர்யவன்ஷிக்கு ஒரு ஓவரில் 17 ரன்கள் எடுக்கவேண்டிய இலக்கு அளித்தார் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர். அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்ததைப் பார்த்து வியந்த விக்ரம் ராத்தோர் உடனே சூர்யவன்ஷிக்கு டிக் அடித்தார். அன்று திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் தான் இவ்வளவு தூரம் சூர்யவன்ஷியை அழைத்து வந்துள்ளது.

பார்க்க பெரிய பையன் போலத் தெரிந்ததால் சூர்யவன்ஷியின் வயது குறித்து சர்ச்சைகளும் ஆரம்பத்தில் எழுந்தன. ஆனால் வயது குறித்த பிசிசிஐயின் எல்லாச் சோதனைகளிலும் தேர்ச்சியடைந்துள்ளார் சூர்யவன்ஷி.

கடந்த செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இளையோர் டெஸ்டில் 58 பந்துகளில் சதமடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார் சூர்யவன்ஷி. இளையோர் கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீரர் என்கிற சாதனையையும் படைத்தார். ஐபிஎல் 2025-ன் முதல் பாதியில் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில் லக்னெளவுக்கு எதிரான ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராகக் களமிறக்கப்பட்டார்.

ஐபிஎல் பணம் சூர்யவன்ஷியைப் பாதிக்குமா என்கிற கவலையும் சிலருக்கு உண்டு. காரணம், இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியில் விளையாடிய இளம் வீரரான பெங்காலின் பிரயாஸ் ரே-வை ரூ. 1.5 கோடிக்கு ஆர்சிபி தேர்வு செய்தாலும் அவர் ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் மட்டும் விளையாடி அப்படியே காணாமல் போய்விட்டார். உள்ளூர் கிரிக்கெட்டில் கூட அவரைக் காண முடியவில்லை. எனினும் 14 வயதில் கோடீஸ்வரன் ஆனாலும் அந்த அந்தஸ்து தன் மகனைப் பாதிக்காது என்கிறார் சூர்யவன்ஷியின் தந்தை. என் மகனுக்கு கிரிக்கெட் விளையாடுவதில் தான் ஆர்வம். மற்றதெல்லாம் அவனுக்குத் தெரியாது என்கிறார் நம்பிக்கையுடன். இந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் மூன்றாவது ஆட்டத்திலேயே சதத்தை நொறுக்கி, அதையும் அதிவேகமாக அடித்து சாதித்திருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.

லாராவை ஆதர்சமாகக் கொண்ட சூர்யவன்ஷி, முதல் ஐபிஎல் ஆட்டத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்த பிறகு கண்ணீருடன் வெளியேறினார். கிரிக்கெட்டையும் தனது விக்கெட்டையும் அவர் எவ்வளவு மதிக்கிறார் என்பதற்கான உதாரணம் அது.

ஐபிஎல் போட்டியில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர், ஐபிஎல் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர், ஆடவர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இளம் வீரர், ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை சமன் என பல்வேறு சாதனைகளை உடைத்தெறிந்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, இவை அனைத்துக்கும் பெற்றோர் தான் காரணம் என்கிறார் கனிவுடன்.

"நான் இன்று அடைந்திருக்கும் நிலைக்கு என் பெற்றோர் தான் காரணம். என்னுடையப் பயிற்சிக்காக என் அம்மா இரவு 11 மணிக்கு உறங்கச் சென்று அதிகாலை 2 மணிக்கு எழுந்துவிடுவார். பிறகு எனக்கான உணவையும் செய்துகொடுப்பார். என் அப்பா எனக்காக வேலையைவிட்டார். என் சகோதரர் தான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறார். வீட்டில் நிலைமை கஷ்டம் தான். ஆனால், கடின உழைப்பைச் செலுத்தியும் வெற்றி பெற முடியாமல் இருப்பவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார்" என்றார் வைபவ் சூர்யவன்ஷி.

ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெயிஸ்வால், அபிஷேக் சர்மா உள்ளிட்டோரைப் பார்த்து இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்று பேசிக்கொண்டிருந்தோம். இவர்களுக்கு அடுத்த தலைமுறையும் பிரகாசமாக இருக்கிறது என்பதற்கான ஓர் உதாரணம் தான் வைபவ் சூர்யவன்ஷி. இந்திய கிரிக்கெட்டை இவர் கட்டி ஆள்வார் என்பதில் இனியும் யாருக்கும் சந்தேகம் இருக்காது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in