என் சிறுகதையுடன் ஒத்துப்போகும் வாழை படம்: எழுத்தாளர் சோ. தர்மன்

"சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என் கதை இலக்கியமாகவே நின்றுவிட்டது."
என் சிறுகதையுடன் ஒத்துப்போகும் வாழை படம்: எழுத்தாளர் சோ. தர்மன்
1 min read

வாழை திரைப்படமும், தான் எழுதிய வாழையடி சிறுகதையும் ஒத்துப்போவதாக எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் வாழை. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகேவுள்ள புளியங்குடி கிராம மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம்தான் வாழை. தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு புனைவுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக மாரி செல்வராஜ் படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். வாழைத்தாரைச் சுமப்பதுதான் கதையின் அடிநாதம். இதன் பின்னணியிலுள்ள உழைப்பு, உழைப்புச் சுரண்டல், அநீதிதான் வாழை படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

என் சிறுகதையுடன் ஒத்துப்போகும் வாழை படம்: எழுத்தாளர் சோ. தர்மன்
மாரி செல்வராஜின் 'வாழை': விமர்சனம்

இந்த நிலையில், வாழை திரைப்படம் தன்னுடைய 'வாழையடி' சிறுகதையுடன் ஒத்துப்போவதாக சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் சோ. தர்மன் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தன்னுடையப் பதிவில், "வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என் கதை இலக்கியமாகவே நின்றுவிட்டது" என்று சோ. தர்மன் குறிப்பிட்டுள்ளார்.

சோ. தர்மனின் பேஸ்புக் பதிவு:

"ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன். என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழைதான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய "வாழையடி.." என்கிற சிறுகதை.

என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.

வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச் சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி"என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது. கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. "வாழை வாழவும் வைக்கும்.தாழவும் வைக்கும்." என்னை வாழை வாழ வைக்கவில்லை. என்னுடைய சிறுகதையை வாசிக்க லிங்க் கொடுத்திருக்கிறேன். வாசியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார் சோ. தர்மன்.

இந்தப் பதிவுடன் தன்னுடைய வாழையடி சிறுகதைக்கான இணைப்பையும் அவர் பகிர்ந்துள்ளார்.

வாழையடி சிறுகதைக்கான இணைப்பு: இங்கே க்ளிக் செய்யவும்..

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in