
தனது பெயரில் மட்டுமே தான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புவதாக அஜித் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரிகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க..... அஜித்தே' என்ற இந்த கோஷம் என்னைக் கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்தச் செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
என்னுடைய இந்தக் கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்!
வாழு & வாழ விடு" என்று அஜித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் 'கடவுளே அஜித்தே' என்ற முழக்கம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில்தான் அஜித் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.