பார்த்திபன், நந்திதா தாஸ் நடிப்பில் தங்கர் பச்சான் இயக்கிய ‘அழகி’ படம் மார்ச் 29 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.
2002-ல் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான படம் ‘அழகி’. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி உட்பட பலரும் நடித்திருந்த இப்படம் சிறந்த படத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றது.
இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மறைந்த பாடகி பவதாரிணி பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா பாடல்’ இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் இப்படத்தில் இடம்பெற்ற ‘பாட்டுச் சொல்லி’ பாடலுக்காக, சாதனா சர்கம் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார்.
இந்நிலையில் ‘அழகி’ படம் மார்ச் 29 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.
பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வதில் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். கடந்த சில மாதங்களில் ‘3’, ‘மயக்கம் என்ன’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, உட்பட பல படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.