
இந்தியப் பெருங்கடலில் உள்ள டியகோ கார்சியா தீவில், வானத்தின் பேய்கள் என்று அழைக்கப்படும் பி-2 ரக போர் விமானங்களை அண்மையில் அமெரிக்கா தரையிறக்கியது.
இதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார். இது, ஈரானையும், பிற நாடுகளில் செயல்படும் ஹெளத்திகள் போன்ற அதன் கூட்டாளிகளையும் செயலிழக்கச் செய்யும் முயற்சியாக நிபுணர்களால் பார்க்கப்பட்டது.
உலகின் அதிநவீன ராணுவ போர் விமானங்களான பி-2வை, ஈரானின் கடற்கரைப் பகுதியில் இருந்து 2,400 மைல் தொலையில் அமெரிக்க நிறுத்தியுள்ளது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே ஹெளத்திகள் மீது வான்வழித் தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டுவருகிறது. இந்த தாக்குதலில் பி-2 போர் விமானங்கள் தற்போது இணைந்துள்ளன.
செங்கடல் பகுதியில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஹௌத்திகள் நிறுத்தும் வரை, அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு முன்பும் ஹௌத்திகளுக்கு எதிரான தாக்குதலை நடத்த பி-2 போர் விமானங்களை ஏற்கனவே அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.
பி-2 போர் விமானங்களுக்குள் உணவை சேமித்து, சூடாக்கும் வசதிகளுடன், கழிப்பறை வசதிகளும் உள்ளன. அதிலும் குறிப்பாக எந்த ஒரு பி-2 விமானமும் இதுவரை தாக்குதல்களின்போது விபத்துக்குள்ளானதில்லை. இந்த போர் விமானங்கள் ரேடார்களிடம் சிக்காமல், வானத்தில் பறக்கும் திறனுடையது.
டியகோ கார்சியா தீவு இங்கிலாந்து நாட்டிற்குச் சொந்தமானதாக இருந்தாலும், அங்கு உள்ள விமான தளத்தை இங்கிலாந்தும், அமெரிக்காவுக்கும் இணைந்து நிர்வகித்து வருகின்றன.