
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த 2 நாட்களாக தாக்குதல்கள் நடைபெற்றுவரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை தணிப்பதில் உதவ தயாராக இருப்பதாக சீனா கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது,
`இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நிலவும் சூழல் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை நேற்றே பகிர்ந்துகொண்டோம். நடப்பு நிகழ்வுகள் குறித்து சீனா கவனத்தில் கொண்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் அண்டை நாடுகளாகவே இருக்கும். அதிலும் அவர்கள் இருவருமே சீனாவின் அண்டை நாடுகள். பயங்கரவாதத்தின் அனைத்துவித வடிவங்களையும் சீனா எதிர்க்கிறது.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கருத்தில்கொண்டு ஐ.நா. சாசனம் உள்பட சர்வதேச சட்டத்தைக் கடைபிடிக்கவும், அமைதியாக இருக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் இரு தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
தற்போதைய பதட்டங்களைத் தணிப்பதில் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க, சர்வதேச அளவில் பிற நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றார்.
மறுபுறம், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் உபயோகித்து வரும் பெரும்பாலான ஆயுதங்கள் சீனாவால் தயாரிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. அதேநேரம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன், மேற்குலக நாடுகளில் தயாரான ஆயுதங்களையும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பயன்படுத்தி வருகிறது.
கடந்த 4 தசாப்தங்களாக எந்த ஒரு போரிலும் சீனா ஈடுபடவில்லை. எனினும், ஷி ஜின்பிங் தலைமையில் பாதுகாப்புப் படைகளையும், ஆயுதங்களையும் அந்நாடு நவீனப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் போர்க்களத்தில் செயல்படும் விதம் குறித்து கண்டறிய, இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றுவரும் தாக்குதல்களை சீனா உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.