
இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உருவாகக் காரணமாக இருந்த இரு நாடுகள் கொள்கையை முன்வைத்து பேசியுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், ஹிந்துக்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று (ஏப்.16) அயலகவாழ் பாகிஸ்தானியர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், ராணுவத் தளபதி அசிம் முனீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில், தளபதி அசிம் முனீர் கூறியதாவது,
`வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும், ஹிந்துக்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று நம் முன்னோர்கள் நம்பினார்கள். நமது மதம் வேறு, பழக்க வழக்கங்கள் வேறு, மரபுகள் வேறு, சிந்தனைகள் வேறு, நோக்கங்கள் வேறு... இதுதான் இரு நாடுகள் கொள்கைகான அடித்தளமாக இருந்தது. நாம் இரு வேறு நாடுகள், ஒரே நாடு அல்ல என்பது அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டது.
பாகிஸ்தானின் கதையை எப்போது மறக்காத வகையில், இதை உங்களது குழந்தைகளுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லவேண்டும். நமது முன்னோர்கள் மகத்தான தியாகங்களைச் செய்துள்ளனர். இந்த நாட்டை உருவாக்குவதற்காக நாங்களும் நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம்… எனது அருமை சகோதர, சகோதரிகளே, மகன்களே, மகள்களே பாகிஸ்தானின் கதையை ஒருபோதும் மறக்கவேண்டாம்’ என்றார்.
இந்த நிகழ்வில் காஷ்மீர் குறித்துப் பேசிய அசீம் முனீர், `எங்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது, காஷ்மீர் எங்களது கழுத்து நரம்பு, அது எங்களின் கழுத்து நரம்பாகவே இருக்கும். எங்களின் காஷ்மீர் சகோதரர்களை அவர்களின் வீரமிக்க போராட்டத்தில் கைவிட்டு விடமாட்டோம்’ என்றார்.