
பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி நடைமுறை நாளை (ஏப்ரல் 2) முதல் அமலுக்கு வருகிறது.
அமெரிக்காவில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அந்நாடுகளில் விதிக்கப்படும் அதிகப்படியான வரிகளுக்கு ஈடாக, அந்நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த பரஸ்பர வரி நடைமுறை நாளை (ஏப்ரல் 2) முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், ஏப்ரல் 2-ம் தேதியை விடுதலை நாள் என்றும், இத்தகைய நடைமுறை வெளிநாட்டுப் பொருட்களை சார்ந்து இருப்பதில் இருந்து அமெரிக்காவை விடுவிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கையால், நியாயமற்ற தொழில் போட்டிகளில் இருந்து அமெரிக்கா பாதுகாக்கப்படும், அமெரிக்க அரசுக்கான வருவாய் உயரும், பிற நாடுகளிடமிருந்து சலுகைகளைக் கோருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என தொடர்ச்சியாகப் பேசி வருகிறார் டிரம்ப்.
அதேநேரம் டிரம்பின் இந்த பரஸ்பர வரி நடவடிக்கை பின் விளைவை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். வரி விதிப்பால் பொருட்களின் விலை அதிகரித்து அது நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும், அதோடு விற்பனை குறைவால் வியாபாரிகளையும் இது பாதிக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கரோலின் லீவிட், ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கும் வரி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவின் பால் பொருட்கள் மீது ஐரோப்பிய யூனியன் 50 சதவீத வரியும், அரிசி மீது ஜப்பான் 700 சதவீத வரியும், விவசாயப் பொருட்கள் மீது இந்தியா 100 சதவீத வரியும், வெண்ணெய் மற்றும் சீஸ் மீது கனடா 300 சதவீத வரியும் விதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.