
வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு இந்தியாவை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா கச்சா எண்ணெய் உற்பத்திக்கு பேர் போன நாடாகும். வெனிசுலாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வரும் சூழலில் குற்றவாளிகளையும், போதை பொருட்களையும் அமெரிக்காவுக்குக் கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று தன்னுடைய ட்ரூத் சோசியல் சமூக வலைதளக் கணக்கில் அறிவித்துள்ளார் டிரம்ப். இந்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 2-ல் அமலுக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பால், வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை பெருமளவு இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024 ஆகிய மாதங்களில் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை உச்சபட்டமாக இறக்குமதி செய்த நாடாக இந்தியா இருந்தது. குறிப்பாக, ஜனவரி 2024-ல் மட்டும் வெனிசுலாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஏறத்தாழ பாதியை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
அத்துடன் 2024-ம் ஆண்டில் மட்டும் சுமார் 22 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்நிலையில், வெனிசுலாவில் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு அங்கே 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.