
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவத் தொடங்கியது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
"நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு நெருக்கமானவன். இந்தியாவும் பாகிஸ்தானும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் காஷ்மீரில் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு மேல் கூட இருக்கலாம். அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் மோசமானது.
1,500-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அவர்களே பிரச்னையைத் தீர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். இரு தலைவர்களையும் எனக்குத் தெரியும். இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது தான். ஆனால், அது எப்போதுமே இருக்கக் கூடியது தான்" என்றார் டொனால்ட் டிரம்ப்.
2019-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியபோது, பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கிணங்க ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக அப்போதும் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், டிரம்பின் கருத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இதுமாதிரியான கோரிக்கை எதையும் வைக்கவில்லை என இந்தியா தரப்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் பேசிக்கொள்வார்கள் என டிரம்ப் தெரிவித்தது இந்தியாவுக்கு சற்று ஆறுதலான கருத்தாக அமைந்துள்ளது.