
பாகிஸ்தானின் லாகூரிலிருந்து வெளியேறுமாறு சொந்த நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இறுதி எண்ணிக்கை இனி தான் தெரிய வரும் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் இன்று விளக்கம் கொடுக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்தது. ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பூஞ்ச் உள்ளிட்ட இடங்களில் அப்பாவி மக்கள் 16 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மேலும், இந்தியாவில் 15 இடங்களில் ராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்த பாகிஸ்தான் முயற்சித்துள்ளது. ஆனால், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு இன்று விளக்கம் கொடுத்தது.
அதேசமயம், பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. லாகூரிலுள்ள வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழிக்கப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இவ்வாறு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்கர்கள் லாகூரைவிட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. ட்ரோன்கள் வெடிப்பது, லாகூர் மற்றும் லாகூர் அருகேவுள்ள வான்பரப்புகளில் ஊடுருவல் நிகழலாம் என்பதால், அனைவரையும் லாகூரைவிட்டு வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. லாகூரைவிட்டு வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும் என்றும் அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.
இதனிடையே, ராவல்பிண்டி மைதானத்தின் வளாகத்தில் ட்ரோன் தாக்குதல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. பிஎஸ்எல் போட்டி நடைபெற்று வருவதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி, வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் அவசரக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பிஎஸ்எல் போட்டியில் சில ஆட்டங்களை மாற்றி நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.