
உக்ரைனில் இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா வேண்டுமென்றே இந்திய நிறுவனத்தின் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கில் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவுடன் சிறப்பு நட்புறவைப் பேணுவதாகக் கூறிவிட்டு இந்தியத் தொழில் நிறுவனங்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கும் ரஷ்யா. குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன."
இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உக்ரைன் எதையும் தெரிவிக்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா தரப்பில் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
உக்ரைன் தரப்பிலிருந்து தாக்குதல் குறித்து தெரிவிக்கப்படுவதற்கு முன்பு, உக்ரைனுக்கான பிரிட்டன் தூதரக அதிகாரி மார்டின் ஹாரிஸ் இதுபற்றி குறிப்பிடுகையில், "இன்று காலை உக்ரைனிலுள்ள மருந்து கிடங்குகளை ரஷ்ய ட்ரோன்கள் அழித்தன. முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த மருந்துகள் நாசமாகின. உக்ரைன் மக்களுக்கு எதிரான ரஷ்யாவின் பயங்கரவாத செயல்கள் தொடர்கின்றன" என்று பதிவிட்டிருந்தார். உக்ரைன் தரப்பில் ஏவுணை எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இவர் ட்ரோன் தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.