

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் பயன்பாட்டில் ஏறத்தாழ 36% ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கிடையில், ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதால் ரஷ்யாவிடம் இருந்து தனது நட்பு நாடுகள் அனைத்து விதமான வர்த்தகங்களையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதனாலேயே அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு 50% வரியையும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.
வர்த்தகத்தைக் குறைத்த இந்தியா
உக்ரைனுடனான போருக்குப் பிறகு தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெய்யை கொள்முதல் செய்யும் மிகப் பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. கடந் ஆண்டு ஜூன் நிலவரப்படி நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் எண்ணெய் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியா, டிசம்பரில் 12 லட்சம் பீப்பாய்களாக வர்த்தகத்தைக் குறைத்தது. இதனை வரவேற்ற டொனால்ட் டிரம்ப், 2025 இறுதிக்குள் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று தெரிவித்தார். ஆனால், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் நாட்டின் நலன் கருதியே முடிவு எடுக்கப்படும், வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு அடிப்பணிய மாட்டோம் என்று இந்திய வெளியுறவுத் துறை உறுதியாக இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடர்கிறது.
டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று (ஜன. 4) செய்தியாளர்களுடன் பேசுகையில், ரஷ்யாவுடன் இந்தியா எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் தெரிவித்ததாவது: “மோடி மிக அருமையான மனிதர். அவர் நல்லவர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது முக்கியம் என்பதையும் அவர் அறிவார். அவர்கள் தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகிறார்கள். நாங்கள் மிக விரைவாக வரியை உயர்த்த முடியும். அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.
On India’s Russian oil imports, US President Donald J Trump has warned India saying, "It was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly..."