

அமெரிக்காவின் வரிக் கொள்கைகளை விமர்சித்து கனடாவில் விளம்பரம் வெளியான நிலையில், அந்நாடு உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து அவ்வப்போது பேசி வந்தார். மேலும், கனடாவுக்கு அதிக வரிகளை விதித்துள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்ற கனடா பிரதமர் மார்க் கார்னி, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பைச் சந்தித்து, கனடா மீதான வரிவிதிப்பு தொடர்பாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென கனடா உடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரிக் கொள்கைகளை விமர்சிக்கும் விதமாக கனடாவில் தொலைக்காட்சி விளம்பரம் வெளியான நிலையில், அதிபர் டிரம்ப் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-
“கனடா ஏமாற்றி சிக்கிக் கொண்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டதாகக் கூறி, மோசடியான விளம்பரம் ஒன்றைக் கனடா வெளியிட்டுள்ளது. ஆனால் உண்மையில் ரொனால்ட் ரீகன் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக அமெரிக்காவின் வரிகளை விரும்பினார். கனடா நீண்ட காலமாக வரிகளை ஏமாற்றி, நமது விவசாயிகளிடம் 400% வரை வசூலித்துள்ளது.
கனடாவின் விளம்பர மோசடியை ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை அம்பலப்படுத்தியுள்ளது. வெறும் 7.5 கோடி டாலருக்காக இந்த விளம்பரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதுவே, அமெரிக்க உச்ச நீதிமன்றம் விதித்துள்ள முக்கிய தீர்ப்பான வரி விவகாரத்தில் கனடா தலையிடுவதற்காகவே இதைச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு வரிகள் மிகவும் முக்கியமானது. இந்த மோசமான நடத்தையின் விளைவாக, கனடா உடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் இதன் மூலம் நிறுத்தப்படுகின்றன” என்று அறிவித்தார்.
President Donald Trump has announced the suspension of trade negotiations with Canada following the airing of advertisements in the country that sharply criticized U.S. tariff policies, escalating tensions between the two nations.