
வடக்கு காஸாவில் உள்ள பெயிட் லஹியா பகுதியில் வைத்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வீதியில் இறங்கி ஹமாஸுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
கடந்த 7 அக்டோபர் 2023-ல் ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் தொடங்கியது. இந்நிலையில், ஹமாஸுக்கு எதிராக காஸாவில் வைத்து மிகப்பெரிய அளவில் பாலஸ்தீனியர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.
ஹமாஸுக்கு எதிராக மட்டுமின்றி, இஸ்ரேலுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்திமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், `ஹமாஸே வெளியேறு’, `ஹமாஸ் தீவிரவாதிகள்’ என்று பாலஸ்தீனியர்கள் கோஷமிட்டுள்ளார்கள். மேலும், `போரை நிறுத்துங்கள்’, `பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள் வாழ வேண்டும்’ போன்ற பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தார்கள்.
காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக போர் நிறுத்தம் நிலவி வந்தது. கடந்த வாரம் காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை பொழிந்ததை அடுத்து, தற்போது வீதிக்கு வந்து ஹமாஸுக்கு எதிராக பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
`மக்கள் சோர்ந்து போய்விட்டனர். காஸாவில் ஹமாஸ் அதிகாரத்தை விட்டுக்கொடுப்பது மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்றால், மக்களைக் காக்க ஹமாஸ் அதிகாரத்தை விட்டுக்கொடுக்கலாமே?’ என்று இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மஜ்டி என்பவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.
பொதுமக்கள் போராட்டத்தை கலைக்கும் வகையில், முகமூடி அணிந்து, ஆயுதம் ஏந்தியிருந்த ஹமாஸ் ராணுவத்தினர் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். டெலிகிராம் செயலியில் போராட்டம் குறித்து தகவல்கள் பகிரப்பட்டதை அடுத்தே அந்த பகுதியில் கூடியதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தார்கள்.