தென் கொரியா விமான விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு (காணொளி)

விமான ஓடுதளத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், நிற்காமல் தடுப்புச் சுவரில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது
தென் கொரியா விமான விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு (காணொளி)
1 min read

தென் கொரியா முவான் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் தென் கொரியாவிலுள்ள முவானுக்கு ஜேஜு ஏர் விமானம் வந்துள்ளது. முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது, தரையிறங்குவதற்கான கியர் வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. இதனால், விமான நிலையத்திலுள்ள ஓடுதளத்தில் தரையிறங்கிய விமானம், கட்டுப்பாட்டை இழந்து நிற்காமல் தடுப்புச் சுவரில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது.

உள்நாட்டு நேரப்படி காலை 9.03-க்கு விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 32 தீயணைப்பு வாகனங்கள் உள்ளன. பல்வேறு ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

விமான விபத்துக்கு ஜேஜு ஏர் விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் மன்னிப்பு கோரியுள்ளார். 1997-க்கு பிறகு தென் கொரியாவில் நிகழும் மிக மோசமான விமான விபத்து இது. 1997-ல் குவாமில் கொரியன் ஏர்லைன் விமானம் விபத்துக்குள்ளானதில் 228 பேர் உயிரிழந்தார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in