
பிரிட்டிஷ் காலனி அரசாங்கத்திடம் இருந்து சிங்கப்பூருக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைத்த காலம் தொடங்கி, கடந்த 60 ஆண்டு காலமாக அந்நாட்டில் அதிகாரத்தில் உள்ள மக்கள் செயல் கட்சி 14-வது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வென்று சாதனை படைத்துள்ளது.
1959-ல் இருந்து சிங்கப்பூரில் தொடர்ச்சியாக ஆளுங்கட்சியாக இருந்துவரும் மக்கள் செயல் கட்சி நேற்று (மே 3) நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 97 இடங்களில் 87 இடங்களில் வென்றுள்ளது. கடைசியாக 2020-ல் நடந்த தேர்தலில் அக்கட்சிக்கு 83 இடங்கள் கிடைத்தது.
கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, மக்கள் செயல் கட்சியின் வாக்கு சதவீதமும் 61.2%-ல் இருந்து 65.6% ஆக உயர்ந்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு இந்த தேர்தலில் 10 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. மக்கள் செயல் கட்சிக்குக் கிடைத்த இந்த வெற்றி பிரதமர் லாரன்ஸ் வாங்கின் தலைமைக்குக் கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் வெற்றி தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் பிரதமர் வாங் கூறியதாவது,
`நாங்கள் ஆட்சி செய்வதற்கான தெளிவான மற்றும் வலுவான வெற்றியை சிங்கப்பூர் மக்கள் வழங்கியுள்ளனர். என் மீதும், எனது குழுவின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் நன்றியுடையவனாவேன். நம் அனைவருக்குமான ஒளிமயமான எதிர்காலத்தைப் பாதுகாக்க, ஓர் அணியாக நிற்போம்’ என்றார்.
2011-ல் முதல்முறையாக சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்குத் தேர்தெடுக்கப்பட்ட லாரன்ஸ் வாங், கடந்த 2024-ல் பிரதமர் லீ லூங் ராஜினாமா முடிவை எடுத்த பிறகு புதிய பிரதமராக தேர்தெடுக்கப்பட்டார். பிரதமராகும் முன்பு பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், சிங்கப்பூர் நிதியத்தின் (மத்திய வங்கி) தலைவராகவும் அவர் திறம்பட செயல்பட்டுள்ளார்.