
உக்ரைனுடன் மே 8 முதல் 10 வரை மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்துள்ளார். இதேபோல போர் நிறுத்தத்தைக் கடைபிடிக்க உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவில் அனுசரிக்கப்படும் இரண்டாம் உலகப் போர் வெற்றி தின கொண்டாட்டங்களை ஒட்டி, மே 8-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை இந்த 72 மணி நேர போர் நிறுத்தம் நீடிக்கும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. `மனிதாபிமான முறையில், வெற்றி தினத்தின் 80வது ஆண்டு நிறைவை ஒட்டி ரஷ்ய தரப்பு போர் நிறுத்தத்தை அறிவிக்கிறது, அனைத்து விதமான போர் நடவடிக்கைகளும் அந்த காலகட்டத்தில் நிறுத்தப்படும்’ என்று ரஷ்ய அரசு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
`உக்ரைன் தரப்பும் இந்த முன்மாதிரியைப் பின்பற்றும் என்று ரஷ்யா நம்புகிறது. போர் நிறுத்தத்தை உக்ரைன் தரப்பு மீறினால், ரஷ்ய ஆயுதப் படைகள் போதுமான, அதேநேரம் விரைவான பதிலடியை வழங்கும்’ என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் பண்டிகையின்போதும் இதேபோல 30 மணி நேர போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது. இருந்தாலும், அந்த காலகட்டத்தின்போது நூற்றுக்கணக்கான தாக்குதல்களில் ஈடுபட்டு போர் நிறுத்தத்தை மீறியதாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பல்வேறு வழிமுறைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான மூன்று ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை முயற்சி செய்து வருகிறது. துப்பாக்கிச் சூட்டை நிறுத்தி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்ய அதிபர் புதினை, அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வரும் நிலையில், போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.