
`உக்ரைன் போரில் சமரசம் செய்துகொள்ளும் வகையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார், ஆனால் அதற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இருக்கக்கூடாது’ என பேசியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டு அதிபர் புதின் பேசியவை பின்வருமாறு,
`அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்புடன் பல வருடங்களாக நான் பேசவில்லை. ஆனால் உக்ரைன் போரில் சமரசம் செய்துகொள்ளும் வகையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார். ஆனால் அதற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இருக்கக்கூடாது. அதேநேரம் எந்த உடன்படிக்கை ஏற்பட்டாலும் அது உக்ரைன் அதிகாரிகள் முன்னிலையில் ஏற்படவேண்டும்’ என்றார்.
இந்த விவகாரத்தில் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயாராக உள்ளதாக புதின் பேசியதாக செய்தி வெளியிட்டுள்ளது ராய்டர்ஸ்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், ரஷ்யா பலவீனமான நிலையில் உள்ளது என்ற கருத்துகளை நிராகரித்துள்ள புதின், 2022-ல் உக்ரைன் ஆக்கிரமிப்புத் தொடங்கியதில் இருந்து ரஷ்யா வலுவடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராக இருந்தாலும், உக்ரைனும் சமரசத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், நேட்டோவின் விரிவாக்கத்திற்கு எதிராகவே உக்ரைனுக்கு எதிரான போரை தொடங்கியதாகும், 2022-க்கு முன்பே உக்ரைனுக்கு எதிராகப் படைகளை அனுப்பி இருக்க வேண்டும் எனவும், தற்போது உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பேசியுள்ளார் புதின்.