பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ரஷ்ய அதிபர் புதின் கண்டனம்!
பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வழியாக உரையாடிய ரஷ்ய அதிபர் புதின், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை முழுமையாக ஆதரிப்பதாகவும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் சட்டத்திற்கு முன்பு நிறுத்தப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு முதன்முதலில் கண்டனம் தெரிவித்த உலகத் தலைவர்களில் அதிபர் புதினும் ஒருவர்.
இந்நிலையில், பிரதமர் மோடியுடனான இன்று (மே 5) நடைபெற்ற உரையாடலின்போது, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அதிபர் புதின் கடுமையாகக் கண்டித்ததாகவும்; அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு அவர் இரங்கல் தெரிவித்ததாகவும், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு அவர் முழுமையான ஆதரவை தெரிவித்ததாகவும் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
மேலும், இந்த தொலைபேசி உரையாடலின்போது, `பயங்கரவாதத் தாக்குதலை `காட்டுமிராண்டித்தனமானது’ என்று புதின் விமர்சித்ததாகவும், பயங்கரவாதத்தின் அனைத்து வெளிப்பாடுகளிலும் அதற்கு எதிரான சமரசம் இல்லாத போராட்டத்தின் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தியதாகவும்’ ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நடப்பாண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள வருடாந்திர இந்திய-ரஷ்ய உச்சிமாநாட்டிற்கான பிரதமர் மோடியின் அழைப்பை அதிபர் புதின் ஏற்றுக்கொண்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி உரையாடலின்போது, இரண்டாம் உலகப் போரின் வெளிப்பாடான வெற்றி தினத்தின் 80-வது ஆண்டு நிறைவையொட்டி, புதினுக்கும் அனைத்து ரஷ்ய மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.