
புதிய ஜனநாயக கட்சியின் (நியூ டெமாக்ரடிக் பார்ட்டி) தலைவரும், காலிஸ்தான் பிரிவினைவாதத்தின் தீவிர ஆதரவாளருமான ஜக்மீத் சீங் நடந்துமுடிந்த கனடா நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
கனடா நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், மீண்டும் லிபரல் கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் அமைந்துள்ளது. இந்நிலையில், பர்னபி மத்திய தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் தோல்வியடைந்தார்.
பர்னபி மத்திய தொகுதியில் 40% வாக்குகளுக்கும் மேல் பெற்று லிபரல் வேட்பாளர் வேட் சாங் வெற்றிபெற்றார். 27% வாக்குகள் மட்டுமே ஜக்மீத் சிங்குக்குக் கிடைத்தது. மேலும், இந்த தேர்தலில் 12 இடங்கள் கிடைக்காததால், அவரது புதிய ஜனநாயக கட்சி தேசிய கட்சிக்கான அந்தஸ்தை இழக்கிறது.
இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் ஜக்மீத் சிங் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`புதிய ஜனநாயக கட்சியை வழிநடத்தியதும், பர்னபி மத்திய தொகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதும் என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். பிரதமர் கார்னிக்கு எனது வாழ்த்துகள். இந்த இரவு புதிய ஜனநாயகக் கட்சியினருக்கு ஏமாற்றமளிக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், சிறந்த கனடாவுக்காக நாம் ஒருபோதும் கனவு காண முடியாது என்று சொல்பவர்களை நம்பும்போதுதான், நாம் தோற்கடிக்கப்படுகிறோம்’ என்றார்.
கனடாவில் வைத்து நிகழ்த்தப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலையில் இந்தியா சம்மந்தப்பட்டுள்ளதாக, ஜக்மீத் சிங்கும், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றம்சாட்டினார்கள். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான அரசுரீதியிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
முன்பு ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமாவும், தற்போது ஜக்மீத் சிங்கின் தோல்வியும் இரு நாட்டு உறவுகளை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.