
கனடா நாட்டின் புதிய பிரதமராக லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி பதவியேற்ற பத்தே நாட்களில், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் அவை கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரியில் கனடா நாட்டின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். அவர் சார்ந்த லிபரல் கட்சியின் புதிய தலைவராகப் பதவியேற்பவர்தான் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்க முடியும் என்ற நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில், சுமார் 85.9 சதவீத வாக்குகள் பெற்று மார்க் கார்னி வெற்றிபெற்றார்.
அதன்பிறகு, கடந்த மார்ச் 14 அன்று, கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான பதற்றங்கள் நிலவிவரும் நிலையில், கனடாவில் புதிய பிரதமர் பதவியேற்றது முக்கியத்துவம் பெற்றது.
இந்நிலையில், நேற்று (மார்ச் 23) அந்நாட்டு கவர்னர் ஜெனரல் மேரி சைமனை சந்தித்த பிரதமர் கார்னி, நாடாளுமன்ற கீழ் அவையைக் கலைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கார்னி வரும் ஏப்ரல் 28-ல் கீழ் அவைக்கான பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். மேலும், வலுவான வெற்றியை கனடா மக்கள் அளிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற கீழ் அவையின் பதவிக்காலம் அக்டோபர் வரை இருக்கும் நிலையில், புதிய பிரதமர் முடிவின்படி முன்கூட்டியே தேர்தல் நடைபெறுகிறது.
பொருளாதார நிபுணரான கார்னி, புதிய அரசு அமைந்தவுடன் பல்வேறு வரி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்து அந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் மக்களிடையே லிபரல் கட்சிக்கான ஆதரவு பெருகியுள்ளதாக கூறப்படுகிறது.