
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, 1972 சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், வான் பரப்பில் பறக்க இந்திய விமானங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்குப் பதிலடியாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இந்நிலையில், அது தொடர்பாக விவாதிக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தலைமையில் அந்நாட்டின் உயர்மட்ட அமைப்பான தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
`பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையிலான வெளிப்படையான நடவடிக்கைகள்; நாடு தாண்டிய கொலைகள் மற்றும் காஷ்மீர் தொடர்பான சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. தீர்மானங்களை பின்பற்றாதது போன்றவற்றை இந்தியா நிறுத்தும் வரை, சிம்லா ஒப்பந்தம் உட்பட ஆனால் அது மட்டுமல்லாமல், இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்திக்கொள்ளும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவுடனான வாகா எல்லைச்சாவடியை உடனடியாக மூடுவதற்கும், அந்த வழித்தடத்தின் வழியாக இந்தியாவிலிருந்து வரும் அனைத்து எல்லை தாண்டிய போக்குவரத்தையும் விதிவிலக்கு இல்லாமல் நிறுத்தவும் தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் வான் பரப்பில் பறக்க இந்திய விமானங்களுக்கும், இந்தியர்களை உரிமையாளர்களாகக் கொண்ட விமான நிறுவனங்களின் விமானங்களுக்கும் தடை விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.
இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றியுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், `எங்களுக்கு எதிராக இந்தியா தீவிரம் குறைந்த போரைத் தொடுத்து வருகிறது. போரைத் தீவிரப்படுத்தினால், நாங்கள் அதற்கு பதிலடி கொடுக்கவும் தயார். எங்களுடைய நிலத்தைப் பாதுகாக்க, எந்தவொரு சர்வதேச அழுத்தத்துக்கும் அடிபணியமாட்டோம்’ என்றார்.
பஹல்காம் தாக்குதலில் தங்களுக்கு எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்றும், எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை எங்கும் ஆதரிப்பதில்லை என்றும் கவாஜா ஆசிப் நேற்று (ஏப்.23) கருத்து தெரிவித்திருந்தார்.