பஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஹஃபீஸ் சயீத் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு!

பாகிஸ்தான் ராணுவம், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து ஹஃபீஸ் சயீத் வீட்டிற்கான பாதுகாப்புத் திட்டத்தை வடிவமைத்துள்ளன.
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஹஃபீஸ் சயீத் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு!
1 min read

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டதாக அறியப்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத்துக்கான பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

லாகூரில் மக்கள்தொகை நெருக்கடி மிகுந்த ஜோஹர் டவுனில் ஹஃபீஸ் சயீத்தின் வீடு அமைந்துள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த வீட்டிற்கான பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 24 மணிநேரமும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவம், அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து ஹஃபீஸ் சயீத் வீட்டிற்கான பாதுகாப்புத் திட்டத்தை வடிவமைத்துள்ளன.

வீட்டையும், அதன் சுற்றுப்புற பகுதிகளையும் கண்காணிக்கும் பணியில் டிரோன்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வீட்டில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சாலைகளில் உயர் தெளிவுத்திறன் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வீடு அமைந்திருக்கும் பகுதியில் தனியார் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது இல்லத்திற்கு அருகே செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பான `ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்’ பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டாலும், தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது ஹஃபீஸ் சயீத் என்று இந்திய பாதுகாப்பு அமைப்புகள் நம்புகின்றன.

சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டு, தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் சன்மானம் விதிக்கப்பட்டிருந்தாலும் பாகிஸ்தானில் வெகு சுதந்திராக ஹஃபீஸ் சயீத் வசித்து வருகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in