
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கும் எங்களுக்கும் நாட்டிற்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்.22) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக `பாகிஸ்தான் லைவ் 92’ செய்தி தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பேட்டியளித்தார்.
`இதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை’ என்று விளக்கமளித்த ஆசிஃப், `நாகலாந்தில் இருந்து காஷ்மீர் வரையிலும், சத்தீஸ்கர், மணிப்பூர் மற்றும் தெற்கிலும் கிளர்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை வெளிநாட்டு தலையீட்டால் ஏற்படும் செயல்கள் அல்ல, உள்ளூர் எழுச்சிகள்’ என்று குறிப்பிட்டார்.
இதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல்களுக்கு, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளே காரணம் என்ற இந்திய அரசின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து, அவரது கருத்துகள் வேறுபட்டுள்ளன.
மேலும் பேசிய ஆசிஃப், `இந்த மக்கள் அவர்களுக்கான உரிமைகளைக் கோருகிறார்கள். சிறுபான்மையினர்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் மீது ஹிந்துத்துவ சக்திகள் அடக்குமுறையை ஏவுகின்றன, அதற்கு மக்கள் எதிர்வினையாற்றுகிறார்கள்.
பலுசிஸ்தானில் ஏற்படும் அமைதியின்மையில் இந்தியாவுக்குப் பங்கு உள்ளது. பாகிஸ்தானில் நிலையற்ற தன்மை நிலவுவதற்கு இந்தியாவே காரணம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஒருமுறை அல்ல பல முறை நாங்கள் ஆதாரங்களை வழங்கியிருக்கிறோம். பாகிஸ்தானைக் குறை கூறுவது மிகவும் வசதியான சாக்காக உள்ளது’ என்றார்.
இந்த தீவிரவாத தாக்குதலுக்குக் காரணமாக பாகிஸ்தான் மீது இந்திய அரசு குற்றம்சாட்டவில்லை. எனினும், மிகவும் இக்கட்டான சூழலில் வெளியாகியிருக்கும் அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரின் கருத்துகளுக்கு இதுவரை இந்திய அரசுத் தரப்பில் இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை.