
இந்தியாவுடனான வர்த்தகத்தை முறித்துக்கொண்டதையடுத்து, மருந்துகளுக்கான மூலப் பொருள்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் மாற்று வழிகளைக் கண்டறிந்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தார்கள். இதற்கு பாகிஸ்தானைக் கண்டித்த இந்தியா, சிந்த நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.
இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. மேலும், இந்தியாவுடனான அனைத்து விதமான வர்த்தகத்தை ரத்து செய்வதாகவும் முடிவு செய்தது.
பாகிஸ்தானின் இந்த முடிவு காரணமாக, அந்நாட்டில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
"மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களில் 30 முதல் 40 சதவீதம் வரை இந்தியாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இது தவிர்த்து சில பொருள்களும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன" என்று அந்நாட்டு தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவது குறித்து சுகாதார அமைச்சகத்திடமிருந்து தெளிவான அறிவுறுத்தல்கள் எதுவும் இதுவரை கொடுக்கப்படவில்லை.
ஒருவேளை இந்தியாவிலிருந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டாலும் மாற்று வழிகளைக் கண்டறிவதற்கான முயற்சியில் பாகிஸ்தான் உள்ளது.
"2019-ல் பதற்றமான சூழல் நிலவியபோதே தயார் நிலைக்குத் தயாராகத் தொடங்கிவிட்டோம். மருந்து தேவைகளுக்கான மாற்று வழிகளைக் கண்டறிந்து வருகிறோம்" என்று அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சீனா, ரஷ்யா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளை மாற்றாக உருவாக்க வழி கண்டறியப்பட்டு வருகிறது.