கனடாவில் மீண்டும் லிபரல் கட்சி ஆட்சி: சாதித்துக்காட்டிய மார்க் கார்னி!

கனடா அரசியலில் அரிதான நிகழ்வாக, தொடர்ச்சியாக 4-வது முறையாக லிபரல் கட்சி ஆட்சி அமையவுள்ளது.
பிரதமர் மார்க் கார்னி
பிரதமர் மார்க் கார்னி
1 min read

பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி, கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கனடாவின் பிரதான ஊடகங்களான சிபிசி மற்றும் சிடிவி நியூஸ் இரண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று லிபரல் கட்சி ஆட்சியைத் தக்க வைக்கும் என்று கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தன. அதேநேரம், லிபரல் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளதை உறுதி செய்யும் வகையில் எந்த ஒரு செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.

கனடா அரசியலில் அரிதான நிகழ்வாக, தொடர்ச்சியாக 4-வது முறையாக லிபரல் கட்சி ஆட்சி அமையவுள்ளது. பொருளாதார நெருக்கடிகளை கையாளும் அனுபவம்கொண்ட தன்னால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்கொள்ள முடியும் என்று அந்நாட்டு வாக்காளர்களிடம் வாக்குறுதி அளித்து இந்த வெற்றியை கார்னி வசப்படுத்தியுள்ளார்.

2008 பொருளாதார நெருக்கடி நிலையின்போது கனடா வங்கியின் ஆளுநராக செயல்பட்டு, பிரச்னையை அவர் திறம்பட சமாளித்தார். பொருளாதார விவகாரங்களில் நீண்ட அனுபவம்கொண்ட கார்னி, இதுவரை தேர்தலை சந்தித்ததில்லை.

கனடா பிரதமர், லிபரல் கட்சித் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தவுடன், அவருக்குப் பதிலாக லிபரல் கட்சித் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட மார்க் கார்னி, பிரதமராகவும் தேர்வானார். இதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அவர் அழைத்துச் சென்றுள்ளார்.

தொடர்ச்சியாக மூன்று முறை ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்ததால், லிபரல் கட்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு நிலை நிலவியது. இருந்தும், தனது தேர்தல் பரப்புரையை டிரம்புக்கு எதிரானதாக அமைத்துக்கொண்ட கார்னி, வெற்றியை வசப்படுத்தியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள வர்த்தகப் போர், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் போன்றவை அந்நாட்டு மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியிருந்தது.

அவற்றை சாதகமாக எடுத்துக்கொண்டு கார்னி சாதித்துக் காட்டியுள்ளார். மேலும், ஜஸ்டின் ட்ரூடோவின் விலகலும் லிபரல் கட்சியின் வெற்றிக்கு உதவியுள்ளது.

அத்துடன், காலிஸ்தான் ஆதரவாளராக அறியப்பட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in