இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்: அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

"அணு ஆயுதப் போராக மாறினால் அது பேரழிவானது."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரில் தாங்கள் தலையிடப்போவதில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக கடந்த இரு நாள்களாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளை இந்தியா வெற்றிகரமாக தாக்கி முறியடித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 8 அன்று இரவு பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் நாடு முழுக்க பெரும் அச்சத்தையும் கவலையையும் அதிகரித்தது.

பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி தருவது குறித்து இந்தியா தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் நேர்காணல் ஒன்றில் இந்தியா, பாகிஸ்தான் போரில் அமெரிக்கா தலையிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

"அணு ஆயுத சக்தியைக் கொண்டுள்ள நாடுகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதும் எங்களுக்கு கவலைக்குரியது. முடிந்தளவுக்கு பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று தான் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் அதிபர் (டொனால்ட் டிரம்ப்) கூறுகிறார்கள்.

இரு நாடுகளையும் எங்களால் கட்டுப்படுத்த முடியாது. பதற்றத்தை சற்று தணிக்க இரு நாடுகளையும் எங்களால் ஊக்கப்படுத்த மட்டுமே முடியும். ஆனால், போருக்கு நடுவே நாங்கள் தலையிடப்போவதில்லை. அடிப்படையில் அது எங்களுடைய வேலையும் இல்லை.

பிராந்தியச் சண்டையாக இது விரிவடையாது என நாங்கள் நம்புகிறோம், அதுதான் எங்களுடைய விருப்பமும் கூட. அணு ஆயுதச் சண்டையாகவும் இது மாறிவிடக் கூடாது. அணு ஆயுதப் போராக மாறினால் அது பேரழிவானது. தற்போதைய நிலையில் அது நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என நினைக்கிறோம்" என்றார் ஜேடி வேன்ஸ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in