
வாடிகன் கார்டினல்கள் மாநாட்டில் புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21 அன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ரோமில் உள்ள சான்டா மரியா பசிலிக்காவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
போப் மறைந்துவிட்டால், போப்புக்கு அடுத்த நிலையில் இருக்கும் கத்தோலிக்க குருமார்களான கார்டினல்கள் ஒன்று கூடி வாக்கெடுப்பு நடத்தி, தங்களுக்குள் புதிய போப்பை தேர்வு செய்வது வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையாகும்.
புதிய போப்பை தேர்வு செய்வதற்கான இந்த கார்டினல்கள் மாநாடு, வாடிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் நேற்று (மே 7) தொடங்கியது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற கார்டினல்கள் அனைவரும் மரபுப்படி ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இந்த வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைத்தால் மட்டுமே, போப் பதவிக்கு ஒருவர் தேர்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.
நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இன்று (மே 8) காலை நடைபெற்ற வாக்கெடுப்பிலும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று மாலை (உள்ளூர் நேரப்படி) 4 மணிக்கு மீண்டும் கார்டினல்கள் மத்தியில் வாக்கெடுப்பு தொடங்கியது.
மாலை 6.08 மணி அளவில் சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து வெள்ளை நிற புகை வெளியானது. இதன் மூலம் புதிய போப் தேர்வு செய்யப்பட்டுள்ளதை கார்டினல்கள் உலகிற்கு அறிவித்துள்ளனர்.
அதேநேரம், புதிய போப் வாடிகனில் பொதுமக்களுக்கு காட்சியளித்த பிறகே, அவர் குறித்த அனைத்து தகவல்கள் வெளிவரும்.