
இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தாக்குதல் நடவடிக்கைக்கு ஆபரேஷன் `புன்யான்-உல்-மசூஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு சில மணிநேரங்கள் கழித்து, (இந்தியாவுக்கு எதிராக) ஆபரேஷன் புன்யான்-உல்-மசூஸை பாகிஸ்தான் தொடங்கியுள்ளதாக, அந்நாட்டு வானொலியில் அறிவிப்பு வெளியானது.
குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஒரு அரபி வசனத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த பெயரின் பொருள் ` உடைக்க முடியாத சுவர்’ என்பதாகும். இத்தகைய பெயரை வைத்ததன் மூலம், ஒரு குறிக்கோளுக்காகப் போராடும் அசைக்க முடியாத சுவர் அல்லது கட்டமைப்பாக தங்கள் நாட்டை சித்தரித்துக்கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது என்று கூறப்படுகிறது.
மேலும், இந்தியா மீதான தாக்குதலுக்கு இதன் மூலம் மதச் சாயத்தை பூசவும் பாகிஸ்தான் முயற்சித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஊடகங்களால் ஆபரேஷன் புன்யான்-உல்-மசூஸ் என்று அழைக்கப்படும் ராணுவ நடவடிக்கையின் கீழ், இன்று (மே 10) அதிகாலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மீது பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. இதில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஃபட்டா-1 ஏவுகணையும் அடங்கும்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்கி அழித்தன. இதற்கு `ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டது.