
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மே 7 முதல் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அடுத்தடுத்த நாள்களில் இந்தத் தீவிரத்தன்மை மேலும் அதிகரித்தது. பாகிஸ்தான் தனது தாக்குதலை அதிகரிக்க, இந்தியாவும் இதற்கானத் தக்க பதிலடியைக் கொடுத்து வந்தது. இதனிடையே தான் சனிக்கிழமை மாலை, இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்தார். டிரம்ப் அறிவிப்பைத் தொடர்ந்தே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை உறுதி செய்தன.
எனினும், சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த விதிமீறலில் ஈடுபட்டதாகச் செய்திகள் வந்தன. இதற்கான பதிலடியை இந்தியப் படைகள் கொடுத்தாலும், ஒப்புக்கொண்டதன்படி பாகிஸ்தான் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் பிரச்னை தொடர்பாக தீர்வு காண இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
"தற்போதைய தீவிரத்தன்மை பல அழிவுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து, பதற்றத்தைத் தணிக்க இதுவே சரியான நேரம் என்பதை முழுமையாக அறிந்து புரிந்துகொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத தலைமையை எண்ணி மிகவும் பெருமைகொள்கிறேன்.
லட்சக்கணக்கான நல்ல, அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்கக்கூடும். துணிச்சலான நடவடிக்கைகளால் உங்களுடைய பாரம்பரியம் மேலும் மேம்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இம்முடிவை அடைய அமெரிக்கா உதவியதை எண்ணி பெருமை கொள்கிறேன். விவாதிக்கப்படாவிட்டாலும், இவ்விரு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தைக் கணிசமாக அதிகரிக்கப் போகிறேன்.
கூடுதலாக, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் பிரச்னை தொடர்பாக ஒரு தீர்வை எட்ட இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றத் தயார்" என்று டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.