
ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுக்குப் போரை நிறுத்த விருப்பமில்லாமல் இருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போப் ஃபிரான்சிஸ் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரோம் சென்றுள்ளார். அங்கு உக்ரைன் அதிபர் விளோதிமீர் ஸெலென்ஸ்கியிடம் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்யா மற்றும் உக்ரனை இடையே சமரசத்தை ஏற்படுத்த டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
ஸெலென்ஸ்கியுடனானப் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமைந்ததாக அமெரிக்கா தரப்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஸெலென்ஸ்கியுடனானப் பேச்சுக்குப் பிறகு எக்ஸ் தளப் பக்கத்தில் ரஷ்யா தாக்குதலைக் கண்டித்து பதிவிட்டார்.
"கடந்த சில நாள்களாக மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் நகரங்களில் தாக்குதல் நடத்த புதினுக்கு எந்தத் தேவையும் இல்லை. போரை நிறுத்த புதினுக்கு விருப்பமில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதை வேறு விதமாகத் தான் கையாள வேண்டும். நிறைய பேர் உயிரிழக்கிறார்கள்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்பதையே டிரம்பின் இந்தப் பதிவு காட்டுகிறது.
முன்னதாக, அமெரிக்கா தரப்புடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில், உக்ரைனுடன் நிபந்தனை எதுவும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.